Saturday, October 29, 2011

இயல்புடைய மூவர்

இயல்புடைய மூவர்

மின் தமிழ்க் குழுமத்தின் மூலம் கிடைத்த நண்பர்களுள் திருவாளர். தேவ் என்ற தேவராசனும் ஒருவர். இவர் பன்மொழி அறிவாளர். இவரின் வடமொழி ஆற்றல் குறிப்பிடத்தக்கது. திருக்குறள் பற்றி அறியக் கருத்துக்களை அவ்வப்பொழுது எழுதுவார். இவர், என்னுடைய மற்றொரு நண்பரான Dr.நாக.கணேசன் (US, NASA)அவர்களிடம், திருக்குறள் இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் வரும், கீழ்க் கண்ட குறளைக் குறிப்பிட்டு இதற்கு சமண சார்ந்த விளக்கம் கூறுமாறு கேட்டிருந்தார். அக்கேள்வி அவரிடம் கேட்கப்பட்டிருந்தாலும், அக்கேள்விக்கான பதிலை யான் குறிப்பிடுவது சாலப் பொருந்தும் என்பதால், இக்கட்டுரையை எழுதவேண்டிய கட்டாயம்!

அக்குறள் இதுதான்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
– திருக்குறள் – 41

தேவ் ஐயா அவர்களுக்கு மட்டுமல்ல பரி உரையைப் படித்தவர்கள் யாருக்கும் கேட்கத் தோன்றும் கேள்விதான் அது. பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்று முதலில் பார்த்துவிட்டு, பின் என் கருத்தை முன் வைக்கிறேன்.

பரிமேலழகர் உரை:

”இல்வாழ்வான் என்பான் – இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான், இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை – அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் சொல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலைபெற்ற துணை ஆம்.

‘இல்’ என்பது ஆகுபெயர். ‘என்பான்’ எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார்: ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங் காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லைவிட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிப்படத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ் ஒழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச் செலவிற்குப் பசி, நோய், குளிர் முதலியவற்றான் இடையூறு வாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந் நெறிகளின் வழுவாமல் செலுத்தலான், ‘நல் ஆற்றின் நின்ற துணை’ என்றார்.”

நான்கு ஆசிரமங்கள்

வேத தர்மம் நான்கு ஆசிரமங்களை போற்றுகிறது.

1. பிரம்மசரியம் – கல்யாணம் செய்யாமலே வாழும் முறை
2. கிருஹஸ்தம் - இல்லறத்தார்
3. வானப்பிரஸ்தம் – காட்டில் வாழும் இல்லறத்தார்
4. சன்யாசம் – துறவறத்தார்

ஆனால், சமண தர்மம் இரண்டே இரண்டு ஆசிரமங்களைத் தான் போற்றுகிறது. ஒன்று இல்லறம் மற்றொன்று துறவறம். குறள், நாலடியார்ப் பகுப்பும் இதுவேயாம். இது நிற்க!!

இயல்புடைய மூவர் என்பதற்கு பரிமேலழகர் பிரம்மசரியம் மேற்கொண்டு ஒழுகுபவர், வானப்பிரஸ்தம் ஏற்றுக் காட்டில் வாழும் தம்பதியர் மற்றும் யாவற்றையும் துறந்தவர்களான துறவறத்தார் என்றுப் பொருள் கொள்கிறார். இவ்வாறுப் பொருள் கொள்வது பொருந்தாது! எவ்வாறெனின்?

பிரம்மசரியம் ஏற்றவர்கள், சன்யாசம் மேற்றவர்கள் இல்லறத்தார்களை அண்டி வாழவேண்டும். இது இயல்பு. ஆனால், தம்பதி சகிதமாக, நாட்டை விட்டு வெளியேறி, காட்டில் வாழும் வானப்பிரஸ்தார் (காட்டு இல்லறத்தார் என்றுச் சொல்லலாமா??), நாட்டில் வாழும் இல்லறத்தார்களை அண்டி பிழைக்கவேண்டிய அவசியமில்லை. ஏன்னென்றால், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையானதை அவர்களே காட்டில் பெற்று வாழ்வார்கள். அவர்களை இல்லறத்தார் போற்றவேண்டிய அவசியமே இல்லை.

அவ்வாறு இருக்கும்போது, இயல்புடைய மூவரில் இருவரே (பிரம்மசரியம், சன்யாசம்) பொருத்தமாகயிருக்கிறது. பரி உரைக் கூறும் மூன்றாவது இயல்புடையவரான வானப்பிரஸ்த்தாருக்கு- காட்டு இல்லறத்தானுக்கு ‘இல்வாழ்வான் துணை’ எவ்வகையில் துணையாகயிருப்பான். சொல்லுங்கள்?

அப்படியென்றால், குறள் கூறும் அம்மூவர் யாவர் அவர்கள் எத்தகையவர்கள் என்றால்?

சமணம் வாழ்த்தும் ஐங்குரவர்கள்:

1. அரஹந்தர் (அருகர்)
2. சித்தர்
3. ஆச்சாரியார்
4. உபாத்தியாயர்
5. சாது அல்லது முனிவர்

அவர்களில், சித்தர், அருகர் பரிநிர்வாணம் (வீடுபேறு) அடைந்தவர்கள். மற்ற மூவர்களான ஆச்சாரியர்கள், உபாதியாயர்கள், சாதுக்கள் (முனிவர்கள்) தற்போதும் இல்லறத்தார்களிடையே வாழ்பவர்கள். இல்லறத்தார் ஆதரவின்றி அவர்கள் தத்தம் கடமைகளை ஆற்ற முடியாது. அவர்களின் உணவு போன்ற தேவைகளுக்கு இல்லறத்தார்களை அண்டியே வாழவேண்டியிருக்கிறது.

இதனை அறநெறிச்சாரம் என்ற தமிழ்ச் சமண நூல்,

“நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கி – யாப்புடைக்
காழும் கிடுகும்போல் நிற்கும் கயக்கின்றி
ஆழிசூழ் வையத்து அறம்”
– பாடல் – 15

என்று துறவறத்தாரை இல்லறத்தார் போற்றவேண்டும் என்றும், இல்லறத்தாருக்குத் துறவறத்தார் துணைப் புரியவேண்டும் என்று வலியுறுத்தி பேசுவதைக் காணலாம்.

இதனால், அக்குறளில் கூறப்பட்ட மூவர்களுக்கும் (ஆச்சாரியர், உபாத்தியர், முனிவர் – துறந்தவர்கள்). இல்லறத்தார் துணையாகயிருக்கவேண்டும் என்று அக்குறள் கூறுகிறது.

இல்லறத்தார் துறவறத்தாரைத் தான் போற்றவேண்டுமா? என்ற கேள்விக்கு, அடுத்தக் குறளிலேயே பதில் கொடுத்திருக்கிறார் தேவர் பெருமான்.

“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை"
– குறள் – 42

உரை: துறந்தவர்களுக்கும், வறுமைப்பட்டோர்களுக்கும், ஒருவரும் இன்றி அனாதைகளுக்கும் இல்வாழ்வான் துணை. (இங்கு இறந்தார் என்பது இரந்தார் என்றிருக்கவேண்டும். ஏட்டு பிழையால் மாறியிருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து)

இல்லறத்தார் – வனப்பிரஸ்தர்

வேதம் போற்றும் நான்கு ஆசிரமங்களைப் பார்த்தோம் இல்லையா. அவர்களில் வனப்பிரஸ்தர்ப் பற்றி சிறிதுத் தெரிந்துக் கொள்வோம். வனப்பிரஸ்தர் என்போர் காட்டில் வாழும் முனிவரும் அவருடைய பத்தினியுமாம். அஃதாவது, தம்பதி சகிதமாக காட்டில் வாழும் முனிவர்கள்.

நாட்டில் வாழும் இல்லறத்தாருக்கும் காட்டில் வாழும் இந்த வனப்பிரஸ்தார் பொருளளவில் வித்தியாசம் கிடையாது. உருவ அளவில் மட்டுமே வித்தியாசம் சொல்லாம்.

இவ்வகையான துறவைத் திருக்குறள் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்ஙனமெனில்,

”தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்”
– திருக்குறள் – பாடல் – 348

என்றும்,

உற்றாருக்கும் உடம்பும் மிகை (குறள் - 345) என்று சொல்லும் போது, இல்லாளைக் கூடவைத்துக் கொண்டு எங்ஙனம் துறவறம் மேற்கொள்வது? சிரிப்பாகயில்லை!!

இதனால் தீர துறக்காமல், தன் பத்தினியுடன் காட்டில் சமைத்து உண்டு வாழ்வோரை (வனப்பிரஸ்தர்) எப்படி துறவறத்தில் சேர்க்க முடியும். அவர்களும் இல்லறம் மேற்கோண்டோரே என்பதையும் நினைவில் நிறுத்தி,துணிக!!

இதனை அறநெறிச்சாரம் அழகாகக் காட்டும்.

“அட்டூண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டூண்ணா மாட்சி உடையவர் – அட்டூண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை
" – பாடல் – 166

இதன் கருத்து:

சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு விருந்தினர் எக்காலத்திலும் சமைத்து உண்ணாத பெருமையுடைய துறவறத்தார்களே ஆவர் என்று கூறுவதைக் காண்க.

(அக்குறளைப் புரிந்துக் கொள்ள இப்பாட்டு பெரிதும் உதவும். இப்பாட்டை தனியாகப் பதிவிட்டு விரிவாக விளக்குவன்)


மேலும் குறளில் எங்கேயும் நான்கு ஆசிரமங்களைக் குறிக்கவில்லை, மாறாக சமணம் போற்றும் இரண்டு ஆசிரமங்களை வெளிப்படையாகப் போற்றுகிறது. இப்பகுப்பிற்கு நாலடியாரே மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

யான் திரும்ப, திரும்பச் சொல்வது யாது என்றால் குறள்ச் சமயம் காண இதுபோன்ற குறள்களை வைத்துத் தேடாதீர்கள். குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் ஒன்றே போதும், அவர்ச் சமயம் காண! என்னை?

பற்றுக பற்றற்றான்! யார் பற்றற்றவர் என்பதையும் உணர்க!!

இதனால், ”இயல்புடைய மூவர்”க் குறளுக்கு, பரிமேலழகர் உரை பொருத்தமாக இல்லை என்பது நன்கு விளங்கும்!!

இரா.பானுகுமார்,
சென்னை

2 comments:

Radhakrishnan said...

உங்கள் உரையும் பரிமேலழகர் உரையும் தவறு என்று சொன்னால் நம்புவீர்களா?

இல்வாழ்வான்

இயல்புடைய மூவர்.

தாய், தந்தை, மனைவி.

மிக எளிதாக ஒன்றை திருவள்ளுவர் சொல்ல இது போன்ற உரைகள் தவறுதலான கருத்தை பரப்புகின்றன.

மேலும் தங்களின் கூற்றுப்படி திருவள்ளுவர் சமணராக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

சமணத்தை வலியுறுத்தி எழுத வேண்டிய சூழல் திருவள்ளுவருக்கு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

கடவுள் வாழ்த்து என்பது பொத்தாம் பொதுவானது. அது அருக பகவான் பற்றி குறிப்பிடுகிறது, இல்லை இந்திரனை குறிப்பிடுகிறது என்பதெல்லாம் அன்றைய மன நிலையில் இருந்த திருவள்ளுவருக்குதான் தெரியும்.

அவர், தான் எழுத போவது ஒரு இலக்கியம் ஆகும், மக்கள் எல்லாம் போற்றுவார்கள், பாதுகாத்து வைத்து இருப்பார்கள் என நினைத்து கூட இருக்க மாட்டார்.

தோன்றின் புகழுடன் என்ற வள்ளுவருக்கு புகழ் என்பதன் அர்த்தமே அன்று வேறு.

மேலும் திருக்குறளில் பல இடைச்செருகல்கள் நிகழ்ந்து இருக்கலாம் என பல தமிழ் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

உங்கள் பார்வையை தவறாக சொல்லவில்லை. எந்த வகையினுலும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு பதில் எழுதலாம் என்பது உறுதி என்பதுதான் நான் சொன்ன தந்தை, தாய், மனைவி.

உங்கள் தமிழ் மிகவும் அருமை.

Banukumar said...

நன்றி இராதாகிருஷ்ணன் அவர்களே!

திருக்குறள் ஒரு கண்ணாடி! எந்தக் கருத்தையும் அது பிரதிப்பலிக்கும்.

தாங்கள் சொல்வதுபோலம் பொருள் கொள்ளலாம் ஐயா. இல்லையென்றால் குறளுக்கு அத்தனை உரைகள் வந்திருக்குமா? :-)

மற்ற கட்டுரைகளையும் படித்து தங்கள் கருத்தை எழுதவும்.

நன்றி!


இரா.பானுகுமார்,
சென்னை